செய்திகள்
புளியங்குடி அருகே தண்ணீர் தொட்டியில் தவறி விழுந்த முதியவர் உயிரிழப்பு
புளியங்குடி அருகே தண்ணீர் எடுக்க சென்ற முதியவர் தொட்டியில் தவறி விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.
புளியங்குடி:
புளியங்குடி அருகே உள்ள மலையடிகுறிச்சி காந்திஜி தெருவை சேர்ந்தவர் வேலுச்சாமி (வயது60). இவருக்கு திருமணம் ஆகவில்லை. இதனால் அவர் தனியாக மலையடிகுறிச்சி பகுதியில் வசித்து வந்தார். மேலும் இவர் அந்த பகுதியில் உள்ள கடைகளில் சிறு சிறு வேலைகள் செய்து அவர்கள் கொடுக்கும் உணவை வாங்கி உண்டு வாழ்ந்து வந்தார்.
இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த கோமதி பாண்டியன் என்பவர் புதியதாக வீடு கட்டி வருகிறார் அவர் வீட்டின் அருகே செப்டிக் டேங்க் தொட்டியில் தண்ணீரை நிரப்பி அதை மூடி போட்டு மூடி பராமரித்து கட்டுமான பணிக்கு பயன் படுத்தி வந்தார். சம்பவத்தன்று வேலுச்சாமி இயற்கை உபாதையை கழித்துவிட்டு கோமதி பாண்டியன் வீட்டில் உள்ள செப்டிக் டேங்க் தொட்டியின் மூடியைத் திறந்து தண்ணீர் எடுக்க சென்றார். அப்போது எதிர் பாராதவிதமாக அவர் தவறி உள்ளே விழுந்து விட்டார்.
இதில் அவர் நீரில் மூழ்கி இறந்தார். இதுகுறித்து வேலுச்சாமியின் அண்ணன் மகன் சரவணபாண்டியன் புளியங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.