குலசேகரத்தில் சாக்கு மூட்டையில் மணல் கடத்திய வாலிபர் கைது
நாகர்கோவில்:
குமரி மாவட்டம் வழியாக கேரள மாநிலத்திற்கு மணல், ரேசன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத் கடத்தல் சம்பவத்தில் ஈடுபடுவர்களை கண்காணித்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தார்.
குலசேகரம் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சரவணகுமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் குற்றியானி பட்டணம் கால்வாய் பகுதியில் வரும் போது கால்வாயில் இருந்து சாக்கு மூட்டையில் 2 பேர் மணல் அள்ளிக்கொண்டிருந்தனர்.
போலீசார் வருவதை பார்த்ததும் அந்த 2 பேரும் அங்கிருந்து தப்பிச் ஓட முயற்சி செய்தனர். போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். இதில் ஒருவர் தப்பி ஓடி விட்டார். பிடிபட்டவரிடம் விசாரணை நடத்தியதில் சுருளோடு பகுதியைச் சேர்ந்த விபின்(வயது23) என்பதும் தப்பி ஓடியவர் பொன்மனை பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் விபினை கைது செய்தனர்.