செய்திகள்
லாரி மீது மோதியதில் கார் சுக்குநூறாக நொறுங்கி கிடக்கும் காட்சி.

திண்டுக்கல் அருகே விபத்து - 4 வாலிபர்கள் பலி

Published On 2018-12-02 05:57 GMT   |   Update On 2018-12-02 05:57 GMT
திண்டுக்கல் அருகே இன்று அதிகாலை லாரி மீது கார் மோதிய விபத்தில் சம்பவ இடத்திலேயே 4 வாலிபர்கள் உயிரிழந்தனர். #accident

திண்டுக்கல்:

கர்நாடக மாநிலம் பெங்களூர் லக்ரி பகுதியைச் சேர்ந்த வெங்கடேஷ் மகன்கள் ஹரிபாபு (வயது 26), ஹரீஷ் (24), அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் லோகேஷ் (28). நண்பர்களான இவர்கள் 3 பேரும் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் நடைபெறும் நண்பர் தினேஷ் என்பவரின் திருமணத்துக்காக நேற்று இரவு பெங்களூரில் இருந்து ஒரு காரில் வந்து கொண்டு இருந்தனர்.

காரை பெங்களூரைச் சேர்ந்த மஞ்சுநாத் (40) என்பவர் ஓட்டி வந்தார். இன்று அதிகாலை 5.30 மணியளவில் திண்டுக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே தாடிக்கொம்பு பகுதியில் வந்து கொண்டு இருந்த போது மஞ்சுநாத் சற்று அயர்ந்து விட்டார்.

அப்போது முன்னால் சென்ற ஒரு லாரி மீது பயங்கரமாக கார் மோதியது. இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல் நொறுங்கியது. காருக்குள் இருந்த 4 பேரும் திடீரென நடந்தது அறியாமல் அலறினர்.

இதில் காருக்குள்ளேயே நசுங்கி ஹரிபாபு, ஹரீஷ், லோகேஷ் ஆகிய 3 பேரும் உயிரிழந்தனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் மஞ்சுநாத்தை அங்கிருந்தவர்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஆனால் வரும் வழியிலேயே அவரும் இறந்து விட்டார். இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் ஐ.டி. நிறுவனத்தில் பணிபுரிபவர்களாக இருக்கலாம் என தெரிய வந்துள்ளது. அண்ணன்-தம்பி உள்பட விபத்தில் 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.  #accident

Tags:    

Similar News