செய்திகள்

பூதப்பாண்டி அருகே துணிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை

Published On 2018-11-22 11:10 GMT   |   Update On 2018-11-22 11:10 GMT
பூதப்பாண்டி அருகே போதிய வருமானம் கிடைக்காததால் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் துணிக்கடை அதிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

தக்கலை:

பூதப்பாண்டியை அடுத்த அழகியபாண்டியபுரம் செம்பாவிளை பகுதியை சேர்ந்தவர் அலெக்ஸ் (வயது 32). இவருக்கு மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.

இவர் அழகியபாண்டி புரத்தில் துணிக்கடை ஒன்று நடத்தி வந்தார். இந்த நிலையில் துணிக்கடையில் இருந்து போதிய வருமானம் கிடைக்காமல் இருந்துள்ளது. இதனால் கணவன்-மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் தெரிகிறது.

இதனால் கடந்த சில நாட்களுக்கு முன்பு அவரது மனைவி கோபித்துக் கொண்டு தாயார் வீட்டிற்கு சென்று விட்டார். இதில் மன வேதனையுடன் காணப்பட்டு வந்த அலெக்ஸ் நேற்று இரவு வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து பூதப்பாண்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. சம்பவ இடத்திற்கு போலீசார் விரைந்து வந்து பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதேபோல் தக்கலையை அடுத்த பிலாங்கால் செங்கல் விளை பகுதியை சேர்ந்தவர் ராஜ் (50). தொழிலாளி. இவரது மனைவி பூதங்கம் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு இறந்து விட்டார். இவர்களது மகளுக்கு திருமணம் ஆகி கணவருடன் வசித்து வருகிறார். ராஜ் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார்.

இந்த நிலையில் இன்று காலை அவரது மகள் வீட்டிற்கு வந்தார். வீடு திறக்கப்படாமல் பூட்டி கிடந்ததை கண்டு சந்தேகம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன கதவை உடைத்து வீட்டினுள் சென்று பார்த்தார்.

அப்போது வீட்டின் அறையில் ராஜ் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து தக்கலை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தக்கலை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News