ஆண்டிப்பட்டி அருகே பன்றிக் காய்ச்சலுக்கு மேலும் ஒரு பெண் பலி
ஆண்டிப்பட்டி:
ஆண்டிப்பட்டி அருகே உள்ள கடமலைக்குண்டு பகுதியைச் சேர்ந்தவர் பால்ராஜ். இவர் ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவரது மனைவி ஜீவராணி (வயது 34). இவருக்கு கடந்த 10 நாட்களுக்கு முன்பு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டது. அதனையடுத்து தேனி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு காய்ச்சல் குணமாகாததால் மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு ஜீவராணிக்கு பன்றிக்காய்ச்சல் இருந்தது உறுதி செய்யப்பட்டது. ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவராணி நேற்று இரவு பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. ஜீவராணிக்கு 2 குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் காய்ச்சல் அறிகுறி உள்ளதா என பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது.
ஆண்டிப்பட்டியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு மல்லிகா தேவி என்ற பெண் பன்றிக்காய்ச்சலால் உயிரிழந்தார். தற்போது மீண்டும் ஒரு பெண் பலியாகி இருப்பது பீதியை ஏற்படுத்தியுள்ளது. #Swineflu #Dengue