செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்டத்திற்காக பணம் தராததால் தீக்குளித்து வாலிபர் தற்கொலை

Published On 2018-11-13 18:10 GMT   |   Update On 2018-11-13 18:10 GMT
பிறந்த நாள் கொண்டாட தனது பாட்டி பணம் தராததால் மனமுடைந்த வாலிபர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
திருப்பூர்:

திருப்பூர் கொங்கு மெயின் ரோடு ரங்கநாதபுரம் பகுதியை சேர்ந்தவர் சம்பத். இவருடைய மகன் லோகேஷ்(வயது 18). இவர் அந்த பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள்.

இந்த நிலையில் இவர் தனது பிறந்தநாளை கொண்டாடுவதற்காக, அவருடைய பாட்டியிடம் பணம் கேட்டுள்ளார். ஆனால் பாட்டி பணம் கொடுக்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் பாட்டியை மிரட்டுவதற்காக வீட்டில் இருந்த மண்எண்ணெயை எடுத்து தலையில் ஊற்றியுள்ளார்.

பின்னர் அங்கு இருந்த தீப்பெட்டியை எடுத்து தீப்பற்றவைத்து தீக்குளித்து விடுவதாக மிரட்டியுள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரின் உடலில் தீ பற்றியுள்ளது. இதை பார்த்த அவரது பாட்டி கூச்சலிட்டுள்ளார். சிறிது நேரத்தில் லோகேசின் உடல் முழுவதும் தீ பற்றி எரிந்தது.

கூச்சல் சத்தம் கேட்டு அங்கு விரைந்து வந்த அக்கம் பக்கத்தினர் லோகேசின் உடலில் எரிந்து கொண்டிருந்த தீயை அணைத்தனர். பின்னர் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு சென்றனர். இதில் அவருக்கு 90 சதவீதம் தீக்காயம் ஏற்பட்டிருந்தது. அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் லோகேசை மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு டாக்டர் கள் அனுப்பி வைத்தனர்.

அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். தனது பிறந்தநாளிலேயே லோகேஸ் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் உள்ள பொதுமக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 
Tags:    

Similar News