கும்மிடிப்பூண்டி அருகே ஷேர் ஆட்டோவில் இருந்து விழுந்த மாணவி பலி
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டியை அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள நேமலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர். இவரது மகள் தமிழ்ச்செல்வி (வயது 10). இவர் ஆந்திர மாநிலம் சத்யவேட்டில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள்.
நேற்று மாலை பள்ளி முடிந்ததும் சத்யவேட்டில் இருந்து ஷேர் ஆட்டோவில் தமிழ்ச்செல்வி மற்றும் 14 மாணவர்கள் பாதிரிவேடு நோக்கி திரும்பி வந்து கொண்டிருந்தனர். வேன் இல்லாததால் மாணவர்களின் போக்குவரத்திற்காக ஷேர் ஆட்டோவை பள்ளி நிர்வாகமே ஏற்பாடுசெய்து இருந்ததாக கூறப்படுகிறது.
பாதிரிவேடு அடுத்த ரோசாநகர் அருகே வந்த போது ஷேர் ஆட்டோவில் இருந்த தமிழ்ச்செல்வி திடீரென தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை மீட்டு ஈகுவார் பாளையத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். போகும் வழியிலேயே தமிழ்ச்செல்வி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
விபத்து நடந்ததும் ஷேர் ஆட்டோவின் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இது குறித்து பாதிரிவேடு சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். #accident