செய்திகள்

மெரினா கடற்கரையில் விபசார அழகி கொலையில் 2 பெண்கள் திடீர் கைது

Published On 2018-11-08 09:50 GMT   |   Update On 2018-11-08 09:50 GMT
சென்னை மெரினா கடற்கரையில் கொலை செய்யப்பட்ட விபசார அழகி வழக்கில் 2 பெண்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை மெரினா கடற்கரையில் மதுரையைச் சேர்ந்த விபசார அழகி கலைச்செல்வி கடந்த 4-ந்தேதி கொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்தார்.

இது தொடர்பாக அண்ணாசதுக்கம் போலீசார் விசாரணை நடத்தி திருவல்லிக்கேணியைச் சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிரேம் குமார், வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அவரது நண்பர் சூர்யா ஆகியோரை கைது செய்தனர்.

இந்த நிலையில் விபசார அழகி கலைச்செல்வி கொலையில் மேலும் 2 பெண்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்களின் பெயர்கள் சந்தியா (19), ஷீலாபிரியா (26). இவர்கள் இருவருமே விபசார அழகிகள்.

இவர்களுக்கும், பிரேம் குமார், சூர்யாவுக்கும் பழக்கம் இருந்து வந்தது. கலைச்செல்வி மதுரையில் இருந்து இங்கு வந்து விபசாரம் செய்ய தொடங்கிய பிறகு சந்தியா, ஷீலாபிரியா இருவருக்கும் தொழிலில் பாதிப்பு ஏற்பட்டது.

எனவே அவர்கள் பிரேம்குமார், சூர்யாவை சந்தித்து கலைச்செல்வியை தீர்த்துக் கட்டுமாறு கூறி உள்ளனர். அதன்பேரில் கடந்த 4-ந்தேதி அவர்கள் மெரினா கடற்கரையில் கலைச்செல்வியை கொலை செய்தது தெரிய வந்தது.

கொலை நடந்தபோது சந்தியா, ஷீலாபிரியா இருவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களை போலீசார் வழக்கில் சேர்த்தனர்.

இந்த நிலையில் சந்தியா, ஷீலாபிரியா இருவரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
Tags:    

Similar News