செய்திகள்

மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி- 2 வாலிபர்கள் கைது

Published On 2018-11-07 16:18 GMT   |   Update On 2018-11-07 16:18 GMT
விழுப்புரம் அருகே மணல் கடத்தலை தடுத்த போலீஸ்காரரை லாரி ஏற்றி கொல்ல முயற்சி செய்த 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து பல்வேறு பகுதிகளுக்கு திருட்டு தனமாக லாரிகளில் மணல் கடத்தப்பட்டு வருகிறது. இதை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் உத்தரவின் பேரில் தனிப்பிரிவு அமைக்கப்பட்டுள்ளது.

இதில் இடம் பெற்றுள்ள துணை போலீஸ் சூப்பிரண்டு வீமராஜ் மற்றும் போலீசார் மணல் கடத்தலை தடுக்க தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இரவு நேரத்தில் பல்வேறு இடங்களில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று இரவு விழுப்புரம் தாலுகா போலீஸ் நிலையம் அருகே சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் ஜானகிபுரம் என்ற இடத்தில் போலீசார் வாகன சோதனை நடத்தி கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று வேகமாக வந்தது. இதையறிந்ததும் போலீஸ்காரர் ராம்குமார் என்பவர் அந்த லாரியை மறிக்க முயன்றார்.

அப்போது லாரி டிரைவர் போலீஸ்காரர் ராம்குமார் மீது லாரியை மோதுவது போல் வேகமாக வந்தார். திடுக்கிட்டு போன ராம்குமார் அங்கிருந்து விலகி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். பின்னர் போலீசார் ஜீப்பில் விரட்டி சென்று மணல் கடத்தல் லாரியை மடக்கி பிடித்தனர்.

லாரியில் இருந்து விழுப்புரம் அருகே தில்லூர் கிராமத்தை சேர்ந்த ஜெய்கணேஷ் (வயது 37) காவணிபாக்கத்தை ராமச்சந்திரன் ஆகியோரை போலீசார் பிடித்து விழுப்புரம் தாலுகா போலீசில் ஒப்படைத்தனர்.

இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்குபதிவு செய்து போலீஸ்காரர் மீது லாரியை ஏற்றி கொல்ல முயன்ற ராமச்சந்திரன், ஜெய்கணேஷ் ஆகியோரை கைது செய்தார். மேலும் மணல் கடத்தல்பட்ட லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது. #tamilnews
Tags:    

Similar News