ராமநாதபுரம் அருகே தொழிலாளி அடித்துக் கொலை
ராமநாதபுரம்:
ராமநாதபுரம் அருகே உள்ள வாலாந்தரவை கிராமத்தைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 36). இவருக்கு திருமணமாகி பிரியா என்ற மனைவியும், 3 வயதில் ஆண் குழந்தை மற்றும் 4 மாத குழந்தையும் உள்ளது.
சதீஷ்குமார் ராமநாதபுரம் புது பஸ் நிலையம் பகுதியில் உள்ள சி.டி. கடையில் பணியாற்றி வந்தார்.
நேற்று காலை வேலைக்குச் சென்ற சதீஷ்குமார் இரவு நீண்டநேரமாகியும் வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றம் அடைந்த மனைவி மற்றும் உறவினர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடினர்.
இந்த நிலையில் இன்று காலை கழுகூரணி டாஸ்மாக்கடை வாசலில் சதீஷ்குமார் முகத்தில் காயங்களுடன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, கூடுதல் சூப்பிரண்டு வெள்ளத்துரை மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.
பின்னர் சதீஷ் குமாரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இது தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ் குமார் முன் விரோதம் காரணமாக அடித்துக் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதற்கிடையே சதீஷ் குமாரின் உடல் வைக்கப்பட்டுள்ள அரசு ஆஸ்பத்திரி பிணவறை முன்பு அவரது உறவினர்கள் ஏராளமானோர் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.