செய்திகள்

திருப்பரங்குன்றம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலி

Published On 2018-10-29 05:13 GMT   |   Update On 2018-10-29 05:13 GMT
திருப்பரங்குன்றம் அருகே டெங்கு காய்ச்சலுக்கு 5-ம் வகுப்பு மாணவி பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. #Denguefever

மதுரை:

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த மங்கம்மாள் சாலையைச் சேர்ந்தவர் ஸ்ரீதர். இவருடைய மகள் ஐஸ்வர்யா (வயது 11). அந்தப்பகுதியில் உள்ள பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தார்.

சில நாட்களாக ஐஸ்வர்யா காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். எனவே அண்ணாநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் காய்ச்சல் குணமாகவில்லை.

ஐஸ்வர்யாவின் ரத்த மாதிரியை பரிசோதித்ததில் அவர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

டாக்டர்களின் தீவிர கண்காணிப்பில் இருந்த ஐஸ்வர்யா சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

மதுரை மாவட்டத்தில் ஏற்கனவே பன்றி காய்ச்சலுக்கு 4 பேரும், டெங்கு காய்ச்சலுக்கு 2 பேரும் இறந்துள்ளனர்.

தற்போது மதுரை அரசு ஆஸ்பத்திரியில் பன்றி காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 3 பேரும், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 2 பேரும், நிமோனியா மற்றும் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 161 பேரும் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அவர்களுக்கு தனி வார்டுகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #Denguefever

Tags:    

Similar News