அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் அ.தி.மு.க.வினர் அனைவரும் இணைவார்கள்- தங்கதமிழ்செல்வன்
ஆண்டிப்பட்டி:
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. தங்கதமிழ் செல்வன் இன்று ஆண்டிப்பட்டி வந்தார். அவர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
18 எம்.எல்.ஏ.க்கள் மீண்டும் அ.தி.மு.க.வில் சேர வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இது காலம் கடந்த ஞானோதயம். அ.தி.மு.க.வில் உள்ள அனைவரும் விரைவில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தில் இணைவார்கள்.
தினகரனுடன் 18 எம்.எல்.ஏ.க்களுக்கு எந்த மனஸ்தாபமும் இல்லை. அனைவரும் ஒற்றுமையாக உள்ளோம். தற்போது உள்ளாட்சி தேர்தலை நடத்த ஆளும் கட்சியினர் பயப்படுகின்றனர். ஆண்டிப்பட்டி தொகுதியில் அடிப்படை வசதிகள் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
வருஷநாடு கூட்டுக்குடிநீர் திட்டம், ஆண்டிப்பட்டி கூட்டுக்குடிநீர் திட்டம் ஆகியவை கிடப்பிலேயே போடப்பட்டு பயனற்று உள்ளது. மேலும் உள்ளாட்சி அமைப்புகள் இல்லாததால் நிதி பற்றாக்குறை ஏற்பட்டு பணிகள் நடைபெறுவதிலும் சிக்கல் எழுந்துள்ளது.
தற்போது நடைபெறுகின்ற பணிகளிலும் முறைகேடுகள் நடந்துள்ளது. எனவே இவற்றை கண்டித்து வருகிற 10-ந் தேதி ஆண்டிப்பட்டியில் உண்ணாவிரதம் இருக்க உள்ளோம். இதில் அ.ம.மு.க. துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் கலந்து கொள்ள உள்ளார்.
ஜெயலலிதாவால் எம்.எல்.ஏ.வாக நியமிக்கப்பட்ட எங்களை துரோகம் செய்து தகுதி நீக்கம் செய்து விட்டார்கள். இதற்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #thangatamilselvan #admk #edappadipalanisamy #opanneerselvam