செய்திகள்
கவுண்டம்பாளையம் அருகே மொபட்டில் வைத்திருந்த நகை திருட்டு
கவுண்டம்பாளையம் அருகே மொபட்டில் வைத்திருந்த நகை திருடிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கவுண்டம்பாளையம் அருகே உள்ள இடையர்பாளையம் மருதம் நகரை சேர்ந்தவர் செபின் வி. ஜோஸ். வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார்.இவரது மனைவி லீலா வர்கீஸ் (30). இவர் சரவணம்பட்டி ரோட்டில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எட் படித்து வருகிறார்.
சம்பவத்தன்று மாலை கல்லூரிக்கு சென்று விட்டு மொபட்டில் வீட்டிற்கு வந்தார். லீலா வர்கீஸ் தனது இரண்டரை பவுன் நகையை கழற்றி தனது கைப்பையில் வைத்து இருந்தார். பையை மொபட்டில் வைத்து விட்டு வீட்டின் வெளிப்புற கதவை திறந்தார். திரும்பி வந்து பார்த்த போது கைப்பையை காணவில்லை. கண் இமைக்கும் நேரத்தில் மர்ம நபர் கைப்பையை திருடி சென்று விட்டான்.
இது குறித்து லீலா வர்கீஸ் துடியலூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.