செய்திகள்

மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியர் கைது

Published On 2018-10-23 10:16 GMT   |   Update On 2018-10-23 10:16 GMT
செங்கம் பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
செங்கம்:

செங்கம் கண்ணக்குருக்கை அடுத்த மேல்நாச்சிப்பட்டில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில், திருவண்ணாமலை தாமரை நகரை சேர்ந்த கண்ணன் (46) என்பவர் கணித ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.

ஆசிரியர் கண்ணன், பாலியல் தொல்லை கொடுத்ததாக 10-ம் வகுப்பு படிக்கும் மாணவி ஒருவரின் தரப்பில் செங்கம் அனைத்து மகளிர் போலீசில் நேற்று முன்தினம் புகார் அளிக்கப்பட்டது.

இந்த நிலையில், நேற்று பள்ளிக்குள் புகுந்த 50-க்கும் மேற்பட்ட கும்பல் ஆசிரியர் கண்ணனை பயங்கரமாக தாக்கினர். இதில் ஆசிரியர் பலத்தகாயமடைந்தார்.

இதைத்தொடர்ந்து, மாணவி கொடுத்த புகாரின் பேரில் ‘போக்சோ’, பாலியல் துன்புறுத்தல், வன்கொடுமை, தீண்டாமை உள்பட 9 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்த அனைத்து மகளிர் போலீசார் ஆசிரியர் கண்ணனை கைது செய்தனர்.

மேலும், வகுப்பறைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய கும்பல் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பெற்றோர்- ஆசிரியர் கழகம் சார்பில் பாய்ச்சல் போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

மாணவியின் பெற்றோரை வரவழைத்து போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஆசிரியரை தாக்கியவர்களுக்கும் தங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று கூறினர்.

மேல்நாச்சிப்பட்டு அடுத்த வடமாத்தூரை சேர்ந்த கும்பல் தான் ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தினர் என்பது தெரியவந்தது. தாக்குதலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்ட கும்பல் பிடிபட்டனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், தனிப்பட்ட காரணங்களால் தாக்குதல் நடத்தியது தெரியவந்தது. ஆசிரியரை தாக்கிய புகாரில் முதற்கட்டமாக 7பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் 2-வது நாளாக இன்றும் பதட்டமான சூழல் நீடிக்கிறது. பள்ளியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். #tamilnews
Tags:    

Similar News