திருமங்கலம் 4 வழிச்சாலையில் அடுத்தடுத்து விபத்து: 2 பேர் உடல் நசுங்கி பலி
பேரையூர்:
திருமங்கலம் அருகே உள்ள கே.வெள்ளாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் நாகலிங்கம் (வயது 60). இவர், சைக்கிளில் 4 வழிச்சாலையை கடந்த போது அந்த வழியே சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதிவிட்டு நிற்காமல் சென்று விட்டது.
இதில் நாகலிங்கம் சம்பவ இடத்திலேயே பலியானார். இரவு நேரத்தில் விபத்து நடந்ததால் இதனை யாரும் கவனிக்கவில்லை.
பலியான நாகலிங்கத்தின் உடல் அங்கேயே கிடந்த நிலையில், வேறு சில வாகனங்களும் ஏறிச் சென்றன. இதனால் உடல் சிதைந்து விட்டது.
கள்ளிக்குடி போலீசார் விசாரணை நடத்தி மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.
திருமங்கலம் அருகே உள்ள பரம்புபட்டியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் (வயது 42). இவருக்கு திருமணமாகி அமுதா என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.
4 வழிச்சாலையில் ராஜேந்திரன் நடந்து சென்ற போது ராஜபாளையத்தில் இருந்து திருப்புவனம் சென்ற தனியார் பஸ் மோதியது.
இதில் பலத்த காயம் அடைந்த அவரை சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக இறந்தார்.
விபத்து குறித்து பெருங்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.