செய்திகள்

சபரிமலை விவகாரம்: ரஜினிகாந்த் கருத்து குழப்பமாக உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்

Published On 2018-10-21 05:41 GMT   |   Update On 2018-10-21 05:41 GMT
சபரிமலை விவகாரம் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்து குழப்பமாக உள்ளது என்று அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். #MinisterJayakumar #Rajinikanth #Sabarimala

சென்னை:

சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- சபரிமலை விவகாரம் குறித்து நடிகர் ரஜினிகாந்த் கருத்து தெரிவிக்கையில், உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்க வேண்டும். அதே நேரத்தில் மக்களின் ஐதீகத்தையும் மதிக்க வேண்டும் என்று கூறி இருக்கிறாரே?

பதில்:- அது ரஜினியின் தெளிவின்மையை தான் எடுத்து காட்டுகிறது. எந்த கருத்தாக இருந்தாலும் ஆணித் தரமாக சொல்ல வேண்டும். அப்படிப்பட்டவரை தான் கூடியவர்கள்தான் தலைவனாக ஏற்றுக் கொள்ள முடியும்.

கழுவுகிற தண்ணீரில் நழுவுகிற மீனைப்போல இருக்க கூடாது. இது தமிழ் நாட்டு மக்களுக்கு தெரியும்.

யார் என்ன மாதிரி கருத்தை தெரிவிக்கிறார்? யார் நழுவுகிறார்? என்பது மக்களுக்கு தெரியும். அப்படிப்பட்டவர்களை நழுவ விட்டு விட வேண்டும் என்று மக்களுக்கு தெரியும்.


எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால் மத விசயங்களில் அரசியல் கட்சிகள் தலையிடாமல் இருப்பது நல்லது.

ரஜினி சொன்ன கருத்து சரியா? இல்லையா? என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்.

கே:- அ.தி.மு.க.வில் பாராளுமன்ற தொகுதி பொறுப்பாளர்கள் எப்போது நியமிக்கப்படுவார்கள்?

ப:- அ.தி.மு.க.வில் பூத் கமிட்டி போட்டுள்ளோம். ஒவ்வொரு மாவட்டத்திலும் அம்மா அரசின் சாதனைகளை எடுத்து சொல்லி பிரசாரம் செய்து கொண்டிருக்கிறோம்.

எங்களை பொறுத்தவரை 2019 பாராளுமன்ற தேர்தலில் முழுதெம்போடு எதிர்கொண்டு 40 தொகுதிகளையும் கைப்பற்றுவதுதான் எங்களது முதல் இலக்கு.

தி.மு.க.வில் பொறுப்பாளர்களை போடுவது பற்றி கவலை இல்லை. அவர்கள் என்னதான் செய்தாலும் பரீட்சையில் பாஸ் ஆக போவதில்லை.

இவ்வாறு அவர் கூறினார். #MinisterJayakumar #Rajinikanth #Sabarimala

Tags:    

Similar News