செய்திகள்

தேனி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது

Published On 2018-10-14 10:53 GMT   |   Update On 2018-10-14 10:53 GMT
தேனி அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

ஆண்டிப்பட்டி:

தேனி அருகே ஆண்டிப்பட்டி மற்றும் அதன் மலை கிராமங்களில் அதிக அளவு கஞ்சா விற்பனை நடைபெற்று வருகிறது. இதனால் கல்லூரி மாணவர்கள் உள்பட இளைஞர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே கஞ்சாவுக்கு அடிமையாகி சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இது குறித்து போலீசாருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. சென்னையில் இருந்து நுண்ணறிவு போலீசார் 3 மாதத்துக்கு ஒரு முறை சோதனை மேற்கொண்ட போதும் கஞ்சா விற்பனையை தடுக்க முடியவில்லை.

மயிலாடும்பாறை சப்-இன்ஸ்பெக்டர் ராஜா தலைமையிலான போலீசார் தாணிப்பாறை பிரிவு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 3 பேரை நிறுத்தினர். ஆனால் அவர்கள் நிறுத்தாமல் சென்றனர்.

போலீசார் அவர்களை துரத்தி சென்று பிடித்து சோதனையிட்டதில் 1¼ கிலோ கஞ்சா கடத்தி வந்தது தெரிய வந்தது. மேலும் அவர்கள் கணேசன், தர்மர், ஜெயபிரபு என்பதை போலீசார் கண்டுபிடித்தனர். 3 பேரையும் கைது செய்த போலீசார் அவர்களிடம் இருந்து கஞ்சா மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

சின்னமனூர் அருகே ஓடைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் அழகுராஜா தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கருப்பசாமி கோவில் அருகே கஞ்சா விற்ற செல்லத்துரை மனைவி பொன்னுத்தாய் என்பவரை கைது செய்து அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News