செய்திகள்

மனைவி சாணிப்பவுடர் குடித்த அதிர்ச்சியில் வி‌ஷம் குடித்து தொழிலாளி தற்கொலை

Published On 2018-10-13 10:36 GMT   |   Update On 2018-10-13 10:36 GMT
கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே குடும்ப தகராறில் மனைவி சாணிப்பவுடர் குடித்த அதிர்ச்சியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
கவுண்டம்பாளையம்:

கோவை பெரியநாயக்கன்பாளையம் கென்னடி வீதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 42). கூலித்தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி (38). இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் செந்தில்குமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. இதனால் சரியான வேலைக்கு செல்லாமல் இருந்தார். வருமானம் இல்லாமல் குடும்பம் நடத்த ஆனந்தி சிரமப்பட்டார். குடிப்பதை நிறுத்துமாறு கணவரிடம் வற்புறுத்தினார். இருந்தாலும் செந்தில்குமார் குடிப்பதை நிறுத்தவில்லை.

சம்பவத்தன்றும் செந்தில்குமார் குடிபோதையில் வீட்டுக்கு வந்தார். இதனால் கணவன்- மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் மனம் உடைந்த ஆனந்தி சாணிப்புவுடர் கரைத்து குடித்தார். இதனைப்பார்த்து அதிர்ச்சியடைந்த செந்தில்குமாரும் சாணிப்பவுடர் குடித்தார். மயங்கி கிடந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி செந்தில்குமார் பரிதாபமாக இறந்தார். ஆனந்திக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து பெரியநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News