முத்தியால்பேட்டையில் கணவனுடன் ஏற்பட்ட தகராறில் இளம்பெண் மாயம்
புதுச்சேரி:
புதுவை முத்தியால்பேட்டை பெருமாள் கோவில் தெரு சின்னசந்து பகுதியை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 29). இவர் டெய்லர் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி தேவி(23). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது. 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக சுரேசுக்கும், அவரது மனைவி தேவிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்படும். அந்த சமயத்தில் கணவனுடன் கோபித்து கொண்டு சின்னசேலத்தில் உள்ள தாய் வீட்டுக்கு தேவி செல்வது வழக்கம். சில நாட்கள் கழித்து சமாதானமாகி தேவி மீண்டும் கணவர் வீட்டுக்கு வருவார்.
இந்த நிலையில் சம்பவத்தன்று இதுபோல் கணவன்-மனைவிக்கிடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. அப்போது கணவனுடன் கோபித்துக்கொண்டு தேவி வீட்டை விட்டு வெளியே சென்றார். தாய் வீட்டுக்கு சென்றிருக்கலாம் எனகருதி அவரை சுரேஷ் தேடவில்லை. பின்னர், சிலநாட்கள் கழித்து மாமியார் வீட்டில் சுரேஷ் விசாரித்த போது அங்கு தேவி செல்லவில்லை என்பது தெரியவந்தது.
இதையடுத்து சுரேஷ் தனது மனைவி மாயமானது குறித்து முத்தியால்பேட்டை போலீசில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குபதிவு செய்து மாயமான தேவியை தேடி வருகிறார்.