செய்திகள்

காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை - உதவி கலெக்டர் விசாரணை

Published On 2018-10-08 17:29 GMT   |   Update On 2018-10-08 17:29 GMT
பேட்டையில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் விசாரணை நடத்தி வருகிறார்.
பேட்டை:

நெல்லை மாவட்டம் பேட்டை காட்டுநாயக்கன் தெருவை சேர்ந்தவர் ராமகிருஷ்ணன் (வயது 25). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சிவலிங்கம்மாள் (19). இவர்கள் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு சந்துரு என்ற 4 மாத ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. தற்போது பெய்த மழையில் அவர்கள் வசித்து வந்த வீடு ஒழுகியது. இதனால் ராமகிருஷ்ணன், சிவலிங்கம்மாளிடம் வீட்டை சரிசெய்ய உனது பெற்றோர் வீட்டுக்கு சென்று பணம் வாங்கி வா என்று கூறியதாக தெரிகிறது.

இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் ராமகிருஷ்ணன் அங்கிருந்து வெளியே சென்று விட்டார். இந்த நிலையில் மனமுடைந்து காணப்பட்ட சிவலிங்கம்மாள் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். பின்னர் வீட்டுக்கு வந்த ராமகிருஷ்ணன், தனது மனைவி தூக்கில் பிணமாக தொங்கியதை பார்த்து கதறி அழுதார்.

இதுகுறித்து பேட்டை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் அற்புத ஆனந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, சிவலிங்கம்மாளின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இறந்த சிவலிங்கம்மாளுக்கு திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளே ஆவதால் இதுகுறித்து நெல்லை உதவி கலெக்டர் மைதிலி மேல்விசாரணை நடத்தி வருகிறார்.

திருமணம் முடிந்து 1½ ஆண்டுகளில் இளம்பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News