பெரும்பாறை அருகே விபத்து - தொழிலாளி பலி
பெரும்பாறை:
திண்டுக்கல் மாவட்டம் பெரும்பாறை அருகே உள்ள மங்களம்கொம்பு எம்.ஜி.ஆர்.நகரை சேர்ந்தவர் அந்தோணி (வயது 40). இதே பகுதியை சேர்ந்தவர் காமராஜ் (36). இருவரும் கூலிதொழிலாளிகள்.
இவர்கள் மோட்டார் சைக்கிளில் பெரும்பாறையில் இருந்து மங்களம்கொம்பு நேக்கி வந்துக்கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை காமராஜ் ஓட்டினார். அப்போது தாண்டிக்குடியில் இருந்து மதுரை நோக்கி காய்கறிகள் ஏற்றி சென்ற சரக்குவேன் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. படுகாயம் அடைந்த 2 பேரும் உயிருக்கு போராடினர்.
இந்த சமயத்தில் அந்த வழியாக ரோந்து வந்த தாண்டிக்குடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுபகுமார் மற்றும் போலீசார் காயம் அடைந்த 2 பேரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அந்தோணி பரிதாபமாக இறந்தார். திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் காமராஜ் சிகிச்சை பெற்று வருகிறார்.
விபத்து குறித்து தாண்டிக்குடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.