செய்திகள்

குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-10-02 18:27 GMT   |   Update On 2018-10-02 18:27 GMT
ஆரணி அருகே குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
ஆரணி:

ஆரணியை அடுத்த பையூர் ஊராட்சி எம்.ஜி.ஆர். நகரில் 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் சுமார் 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. மேலும் இங்கு தெருவிளக்குகள் எரியவில்லை, குப்பைகள் சரிவர அகற்றப்படவில்லை. இதுகுறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் திடீரென அந்த பகுதியில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்

இதுகுறித்து தகவல் அறிந்த ஆரணி தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலாரகு, மணிமேகலை, முன்னாள் கவுன்சிலர்கள் பாத்திமாவாசு, கல்பனாஆனந்த், ஊராட்சி செயலாளர்கள் விஜயகுமார், அருண்குமார் ஆகியோர் விரைந்து வந்து மறியலில் ஈடுப்பட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.

மேலும் திருவண்ணாமலையில் நடந்த மக்கள் குறைதீர்வு கூட்டத்துக்கு சென்ற செய்யாறு உதவி திட்ட அலுவலர் அரிகரன், ஆரணி ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் எம்.பாண்டியன் ஆகியோர் மாலையில் பையூருக்கு நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது அவர்கள் நிருபர்களிடம் கூறுகையில், ‘இங்கு கடந்த மாதம் 2 ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. ஆனால் அதில் போதிய தண்ணீர் இல்லை. இதனால் வேறு பகுதியில் இருந்து தண்ணீர் கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம். சில தினங்களுக்கு முன்பு கூட தெருவிளக்குகள் மாற்றப்பட்டது. ஆனால் சில சமூக விரோதிகள் மின்விளக்குகளை சேதப்படுத்தி உள்ளனர். உடனடியாக குப்பைகளை அகற்றியும், தெருவிளக்குகள் பராமரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்றனர். 
Tags:    

Similar News