செய்திகள்

களக்காடு-முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் சுற்றுலா பயணிகளுக்கு நுழைவுக்கட்டணம் உயர்வு

Published On 2018-09-18 12:29 GMT   |   Update On 2018-09-18 12:29 GMT
களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் நாளை முதல் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது.
சிங்கை:

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக துணை இயக்குனர் மற்றும் வன உயிரின காப்பாளர் பார்கவ தேஜா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துக்குள் வரும் சுற்றுலா பயணிகள் மற்றும் பிற துறையினர் தங்கள் வாகனத்தில் இருந்த படியே குடிநீர் பாட்டில்கள், பாலித்தீன் பைகள் மற்றும் கழிவு பொருட்களை ஆங்காங்கே வீசாமல் அதற்கென வைக்கப்பட்டுள்ள குப்பை தொட்டிகளில் போட வேண்டும்.

மேலும் அகஸ்தியர் அருவி, மணிமுத்தாறு அருவி, சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு வருபவர்கள் சோப்பு, ஷாம்பு, எண்ணெய் பாக்கெட்டுகள் போன்ற நீர் மாசுபடும் வகையான பொருட்களை உபயோகிக்க கூடாது. தங்களது ஆடைகளை தண்ணீரில் விடக்கூடாது. புலிகள் காப்பக பகுதியை சுத்தப்படுத்தவும், சுத்தமாக வைத்திருக்கவும் மற்றும் அருவி மற்றும் நதியை சுத்தமாக வைப்பதும் நம் அனைவரின் கடமையாகும்.

எனவே நாளை (புதன் கிழமை) முதல் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பக பகுதிக்குள் வரும் அனைத்து சுற்றுலா பயணிகளுக்கும் நுழைவு கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதாவது ஏற்கனவே வசூலிக்கப்படும் நுழைவுக் கட்டணம் ரூ.30 தவிர சூழல் பாதுகாப்பு கட்டணம் ரூ.10 மற்றும் உபரி கட்டணம் ரூ.10 சேர்த்து மொத்தமாக 50 ரூபாயாக நபர் ஒன்றுக்கு வசூலிக்கப்படும்.

மேலும் அகஸ்தியர் மலையின் பெருமைகளை கொண்ட பாரம்பரிய வனப் பூங்கா அமைக்கப்பட உள்ளது. சுற்றுலா பயணிகளுக்காக நன்னீர் மீன்கள் அருங்காட்சியகம், இயற்கையின் அழகை ரசிக்க பார்வை கோபுரங்கள் ஆகியன ஏற்பாடுகள் செய்யப்பட்டு மக்களின் பார்வைக்கு அனுமதிக்கப்பட உள்ளது.

பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் சட்டத்துக்கு உட்பட்டு அகஸ்தியர் மலையை பாதுகாக்கவும், சுத்தமாக பராமரிக்கவும் தொடர்ந்து ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இதுபோல் மணிமுத்தாறு மற்றும் சிவசைலம் அத்திரி மலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், பொதுமக்களிடமும் சூழல் பாதுகாப்பு கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #tamilnews
Tags:    

Similar News