செய்திகள்

நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் - எச்.ராஜா

Published On 2018-09-16 08:39 GMT   |   Update On 2018-09-16 08:39 GMT
ஐகோர்ட் குறித்து எச்.ராஜா தரக்குறைவாக பேசும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாக பரவி வந்த நிலையில், நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்புகின்றனர் என அவர் இன்று கூறியுள்ளார். #HRaja #BJP
திருவாரூர்:

மதுரை ஐகோர்ட்டு கிளையில் அனுமதி பெற்று புதுக்கோட்டை மெய்யபுரம் மகாமுத்து மாரியம்மன் கோவில் முன்பு விநாயகர் சிலை விஜர்சனம் செய்வதற்காக அங்கிருந்து ஊர்வலம் தொடங்கியது. ஊர்வலத்தை பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தொடங்கி வைத்தார்.

மெய்யபுரம் ஊருக்குள் வீதிகளில் விநாயகர் சிலைகளுடன் ஊர்வலமாக செல்ல பொது மக்கள் முயன்றனர். இதற்கு போலீசார் எதிர்ப்பு தெரிவித்தால் எச்.ராஜா கடும் வாக்குவாதம் செய்தார். மேலும் போலீசாரை கண்டித்து, எச்.ராஜா மற்றும் அப்பகுதி மக்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் சுமூக உடன்பாடு ஏற்பட்டதையடுத்து ஊர்வலம் ஊருக்குள் செல்ல அனுமதி வழங்கப்பட்டது. பின்னர், மெய்யபுரத்தில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள குளத்தில் சிலை கரைக்கப்பட்டது.



இதற்கிடையே போலீசாருடன் எச்.ராஜா வாக்குவாதம் செய்த போது, காவல் துறை மற்றும் நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய காட்சிகள் வீடியோவாக வெளியாகி இணையதளங்களில் வேகமாக பரவி வந்தது. அவர்  ‘தமிழக டி.ஜி.பி. வீட்டில் சோதனை நடக்கிறது. போலீசார் லஞ்சத்தில் மூழ்கி உள்ளனர் என்றும் சிறையில் கைதிகளுக்கு வசதிகள் வழங்கப்பட்டு வருகிறது’ என்றும் காரசாரமாக பேசினார்.

இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் இன்று காலை விநாயகர் சிலை ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை பா.ஜ.க தேசிய செயலாளர் எச்.ராஜா கொடியசைத்து தொடங்கி வைத்து பேசினார்.

நீதிமன்றத்தை மதிப்பவன் நான். நீதிமன்றம் குறித்து நான் பேசியதை எடிட் செய்து பொய்யான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இதுபோன்று தொடர்ந்து பல்வேறு சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.

ஐ.ஜி. பொன்மாணிக்க வேல் போல பத்து போலீஸ் அதிகாரிகள் இருந்தால் தான் இந்துக்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். அறநிலையத்துறைக்கு சொந்தமான கோவில் நிலங்களை அறநிலையத் துறையினர் சரியான முறையில் பாதுகாக்கவில்லை.

கோவில் பணத்தை விதவிதமாக அறநிலையத் துறை அதிகாரிகள் செலவு செய்கிறார்கள். புழல் சிறையில் கைதிகள் இருக்கும் இடத்தில் டி.வி, ஆப்பிள் போன், கம்ப்யூட்டர் போன்றவை இருப்பது போல் வரும் காட்சிகள் பயங்கரவாதிகளுடன் சிறைக் கைதிகள் தொடர்பு வைத்துக் கொள்ள உதவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார். #HRaja #BJP
Tags:    

Similar News