செய்திகள்
நாகர்கோவிலில் லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து 6 பவுன் நகை கொள்ளை
லாரி டிரைவர் வீட்டின் பூட்டை உடைத்து பீரோவில் இருந்த 6 பவுன் நகை மற்றும் டி.வியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.
நாகர்கோவில்:
நாகர்கோவில் வட்டவிளையைச் சேர்ந்தவர் மாரிக்குமார். லாரி டிரைவர். இவரது மனைவி பிரியதர்ஷனி(வயது23).இவர்களுக்கு 1 1/2 வயதில் குழந்தை உள்ளது.
மாரிக்குமார் அவரது மனைவி பிரியதர்ஷனி ஆகி யோர் இரவு வீட்டின் மாடியில் டி.வி. பார்த்து விட்டு கீழ் தளத்தில் உள்ள அறையில் வந்து தூங்கினார்கள். காலை கண்விழித்து பார்த்த போது வீட்டின் மாடி கதவில் போடப்பட்டிருந்த பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளேச் சென்று பார்த்த போது பீரோவும் உடைக்கப்பட்டு பொருட்கள் சிதறிக்கிடந்தன.
பீரோவில் இருந்த 6 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும் டி.வி.யையும் மர்ம நபர்கள் தூக்கிச் சென்றிருந்தனர். திருட்டுப்போன நகையின் மதிப்பு ரூ.1 1/2லட்சமாகும். இதுகுறித்து கோட்டார் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்துச் சென்று விசாரணை நடத்தினார்கள். கைரேகை நிபுணர்களும் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்தனர். கொள்ளை சம்பவம் குறித்து பிரியதர்ஷனி கோட்டார் போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.