செய்திகள்

சூலூர் அருகே வெவ்வேறு விபத்தில் வாலிபர்-தொழிலாளி பலி

Published On 2018-09-10 11:53 GMT   |   Update On 2018-09-10 11:53 GMT
சூலூர் அருகே வெவ்வேறு பகுதியில் நடந்த விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
சூலூர்:

சூலூர் பூரண்டாம் பாளையம் அண்ணா நகரை சேர்ந்தவர் சுந்தரம் (55). கூலி தொழிலாளி. இவர் வேலை முடிந்து பல்லடம் - பொள்ளாச்சி சாலையில் செஞ்சேரி பிரிவு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக வந்த வாகனம் சுந்தரம் மீது மோதியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே சுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து அவரது உறவினர்கள் சுல்தான்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து சுந்தரம் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற வாகனத்தை தேடி வருகின்றனர்.

சூலூர் அருகே உள்ள பள்ள பாளையத்தை சேர்ந்தவர் முருகேசன். அப்பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் பாலகிருஷ்ணன் (28). இவர் பாப்பம்பட்டி பகுதியில் இருந்து இடையர்பாளையத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.

அப்போது எதிரே வந்த இரு சக்கர வாகனத்தில் மோதியதில் பாலகிருஷ்ணன் பலத்த காயம் அடைந்தார். அவரை பொதுமக்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலே பாலகிருஷ்ணன் இறந்தார். இது குறித்து சூலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News