செய்திகள்

நூல் பண்டல்கள் ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் தொழிலாளி பலி

Published On 2018-09-06 16:18 GMT   |   Update On 2018-09-06 16:18 GMT
கரூர் அருகே நூல் பண்டல்கள் ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்ததில் தொழிலாளி உயிரிழந்தார். 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
கரூர்:

கரூரில் உள்ள ஒரு டெக்ஸ்டைல் நிறுவனத்தில் இருந்து நூல் பண்டல்களை ஏற்றி கொண்டு மண்மங்கலத்தை நோக்கி நேற்று முன்தினம் சரக்கு ஆட்டோ ஒன்று சென்று கொண்டிருந்தது. கரூர் வடிவேல்நகரை சேர்ந்த பாலசுப்ரமணியன் (வயது 52) என்பவர் சரக்கு ஆட்டோவை ஓட்டி சென்றார். அதில் கரூர் அருகே ரெட்டிபாளையத்தை சேர்ந்த வேலுசாமி(35), சின்னகோதூரை சேர்ந்த வைரபெருமாள், ஆண்டாங்கோவில் கீழ்பாகத்தை சேர்ந்த சண்முகம் ஆகிய தொழிலாளர்கள் பயணம் செய்தனர்.

கரூர் செம்மடையை தாண்டி கரூர்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் சரக்கு ஆட்டோ சென்று கொண் டிருந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி மைய தடுப்புச்சுவரில் மோதி எதிரேயுள்ள சாலையில் கவிழ்ந்தது.

இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வேலுசாமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். டிரைவர் பாலசுப்ரமணியன், வைரபெருமாள், சண்முகம் ஆகிய 3 பேரும் படுகாயம் அடைந்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்த வாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இறந்த வேலுசாமியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 
Tags:    

Similar News