செய்திகள்

மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் - ஜி.கே.வாசன்

Published On 2018-09-05 06:41 GMT   |   Update On 2018-09-05 06:41 GMT
மேகதாது அணை கட்டும் கர்நாடக அரசின் முயற்சியை தமிழக அரசு தடுக்க வேண்டும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார். #GKVasan #karnataka #cauvery

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிகள் மேற்கொள்வது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேகதாதுவில் அணைக் கட்டுவது தொடர்பாக சாத்தியக்கூறு அறிக்கையை கர்நாடக அரசு, மத்திய நீர் வளத்துறையிடம் சமர்பித்துள்ளது.

இதனை மத்திய நீர்வளத்துறை நிராகரிக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். காரணம் காவிரியில் குறுக்கே தன்னிச்சையாக அணைக்கட்ட எந்த ஒரு குறிப்பிட்ட மாநிலத்திற்கும் அதிகாரம் இல்லை. அப்படி இருக்கும் போது கர்நாடக அரசு தமிழகத்தின் எதிர்ப்பையும் மீறி மேகதாதுவில் அணைக்கட்ட முயற்சிகள் எடுப்பது ஏற்புடையதல்ல.

உச்சநீதிமன்றத்தால் அமைக்கப்பட்ட காவிரி மேலாண்மை ஆணையம், நீர் ஒழுங்காற்றுக்குழு ஆகியவை இருக்கும் போது, தன்னிச்சையாக மேகதாதுவில் அணைக்கட்ட மத்திய அரசை கர்நாடக அரசு நாடுவதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ள முடியாது.


கர்நாடகாவின் குடிநீருக்கும், மின்சார உற்பத்திக்கும் மேகதாதுவில் அணைக்கட்ட திட்டமிடுவது தமிழகத்திற்கு காவிரி நதிநீரை முறையாக, உரிய காலத்தில், பங்கீடான தண்ணீரை வழங்கக்கூடாது என்ற நோக்கமே. இதனால் தமிழகத்தின் விவசாயத்திற்கும், காவிரி நதிநீரை குடிநீராக பயன்படுத்தும் பொது மக்களுக்கும் தண்ணீர் கிடைக்காமல் பெரும் பாதிப்புக்கு உள்ளாவார்கள் என்பதை மத்திய அரசு கவனத்தில் கொள்ள வேண்டும்.

இது சம்பந்தமாக மத்திய அரசு உறுதியான நிலைப்பாட்டை எடுத்து கர்நாடக அரசை கண்டிப்பதோடு, அதன் சாத்தியக்கூறு அறிக்கையை நிராகரிக்க வேண்டும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணைக்கட்ட தமிழக அரசு தடையாக இருக்கும் என்பதை நிரூபிக்கும் வகையில் தீவிர நடவடிக்கையில் தொடர்ந்து ஈடுபட வேண்டும்.

இவ்வாறு ஜி.கே.வாசன் கூறியுள்ளார். #GKVasan #karnataka #cauvery

Tags:    

Similar News