செய்திகள்

வடமதுரை அருகே மில்லில் தூக்குப்போட்டு இளம்பெண் தற்கொலை

Published On 2018-08-29 11:34 GMT   |   Update On 2018-08-29 11:34 GMT
வடமதுரை அருகே தனியார் மில்லில் இளம் பெண் தற்கொலை செய்து கொண்டதையடுத்து உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
வடமதுரை:

கரூர் மாவட்டம் கடவூர் அருகே உள்ள ஆலத்தூரைச் சேர்ந்தவர் தங்கராஜ். இவரது மகள் ஜனனி (வயது 19). வடமதுரை அருகே உள்ள நாடு கண்டனூர் பிரிவில் உள்ள தனியார் மில்லில் தங்கி வேலை பார்த்து வந்தார். நேற்று விடுதி அறையிலேயே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இது குறித்து மில் நிர்வாகத்தினர் வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து ஜனனியின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

ஜனனியின் அறையில் ஒரு கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் தான் ஒருவரை காதலித்ததாகவும், அவர் வேறு பெண்ணை திருமணம் செய்து கொண்டதால் தான் தற்கொலை செய்து கொள்வதாகவும் எழுதி இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஜனனியின் தற்கொலை குறித்து அறிந்ததும் அவரது உறவினர்கள் மற்றும் இந்து முன்னணியினர் திண்டுக்கல் - திருச்சி 4 வழிச்சாலையில் திடீர் மறியலில் ஈடுபட்டனர். வேடசந்தூர் டி.எஸ்.பி. தலைமையிலான போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அவர்கள் கலைந்து செல்லாததால் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைய வைத்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டதுடன் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அனுமதியின்றி மறியலில் ஈடுபட்ட 10-க்கும் மேற்பட்டவர்கள் மீது வடமதுரை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News