செய்திகள்

ஒரு மாதமாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2018-08-27 14:25 GMT   |   Update On 2018-08-27 14:25 GMT
தருமபுரி மாவட்டம், கடத்தூர் பகுதியில் 1 மாதமாக குடிநீர் வழங்காததால் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடத்தூர்:

தருமபுரி மாவட்டம், கடத்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 11-வது வார்டு வீரகவுண்டணுர் பகுதியில் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 1 மாதமாக இந்த பகுதிக்கு முறையாக குடிநீர் வழங்க வில்லை. இதனால் பொதுமக்கள் குடிக்க தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வந்தனர்.

மேலும் குடிநீர் தேவைக்கு அருகில் உள்ள விவசாய கிணற்றில் இருந்து பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர். மேலும் இரவு நேரங்களில் மின்சாரம் அடிக்கடி நிறுத்தப்படுகிறது. இதனால் இரவு நேரங்களில் பொதுமக்கள் தூங்குவதற்கு மிகவும் சிரமப்படுகின்றனர். இது குறித்து அந்த பகுதி மக்கள் முறையாக குடிநீர் வழங்க கோரி கடத்தூர் பேரூராட்சி நிர்வாகத்திடம் பல முறை மனு கொடுத்தனர். ஆனால் நிர்வாகத்தினர் இது வரைக்கும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனை கண்டித்து அந்த பகுதி பொதுமக்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இன்று காலை கடத்தூர்- தாளநந்தம் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த கடத்தூர் சப்- இன்ஸ்பெக்டர் மதியழகன், பேரூராட்சி அதிகாரிகள், வருவாய் ஆய்வாளர் விஜி ஆகியோர்கள் விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். 

அப்போது குடிநீர் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர். இதனால் பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Tags:    

Similar News