செய்திகள்

அய்யலூர் அருகே மேற்கூரையை பிரித்து கடையில் கொள்ளை

Published On 2018-08-20 09:56 GMT   |   Update On 2018-08-20 09:56 GMT
அய்யலூர் அருகே கடையின் மேற்கூரையை பிரித்து பொருட்களை கொள்ளையடித்து சென்ற மர்ம கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.
வடமதுரை:

அய்யலூரை சேர்ந்தவர் வேல்முருகன் (வயது38). இவர் திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரம் வாகனங்கள் உதிரி பாக கடை வைத்துள்ளார். கடந்த சனிக்கிழமை வியாபாரம் முடிந்து வழக்கம்போல் கடையை மூடி சென்றார்.

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் இன்று காலை வழக்கம்போல் கடையை திறக்க வந்துள்ளார். அப்போது கடையின் மேற்கூரை உடைக்கப்பட்டிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

உள்ளே சென்று பார்த்த போது உதிரி பாகங்களை மர்ம கும்பல் திருடி சென்றிருப்பது தெரிய வந்தது. மேலும் கடையில் இருந்த ரூ.7 ஆயிரம் பணத்தையும் கொள்ளை கும்பல் எடுத்து சென்றது தெரிய வந்தது.

இது குறித்து வடமதுரை போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து கொள்ளையர்களை தேடி வருகின்றனர்.

தேசிய நெடுஞ்சாலையில் மின் விளக்குகள் எரிவதில்லை. இது குறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தற்போது கொள்ளை நடந்த கடையின் அருகே விளக்குகள் எரியாததால் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதன் காரணமாகவே கொள்ளையர்கள் தங்கள் கைவரிசையை காட்டி உள்ளனர்.

எனவே மின் விளக்குகள் அமைக்க வேண்டும், கொள்ளை கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

Tags:    

Similar News