வீராம்பட்டினத்தில் கடலில் குளித்த வாலிபர் ராட்சத அலையில் சிக்கி பலி
புதுச்சேரி:
வில்லியனூர் கணுவாப்பேட்டை செங்குந்தர் வீதியை சேர்ந்தவர் ராமச்சந்திரன் கூலித் தொழிலாளி. இவரது மகன் சூர்யா (வயது 20). இவர் 8-ம் வகுப்பு வரை படித்து விட்டு வீட்டில் இருந்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று வீராம்பட்டினம் கோவில் திருவிழாவுக்கு சூர்யா தனது நண்பர்களுடன் சென்றார்.
தேர் திருவிழாவை பார்த்து விட்டு பின்னர் சூர்யா நண்பர்களுடன் அங்குள்ள கடலில் குளித்தார்.
அப்போது திடீரென எழுந்த ராட்சத அலையில் சூர்யா சிக்கினார். அலை அவரை கடலுக்குள் இழுத்து சென்றது. இதனை பார்த்து அவரது நண்பர்கள் அலறினர். உடனடியாக அங்கிருந்த மீனவர்கள் கடலில் இறங்கி மயங்கிய நிலையில் சூர்யவை மீட்டனர்.
பின்னர் சிகிச்சைக்காக புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தனர். ஆனால், வழியிலேயே சூர்யா பரிதாபமாக இறந்து போனார்.
இந்த சம்பவம் குறித்து அரியாங்குப்பம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இளங்கோ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.