செய்திகள்

திருவோணம் அருகே விபத்து- விவசாயி பலி

Published On 2018-08-10 11:14 GMT   |   Update On 2018-08-10 11:14 GMT
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே வேன் மோதிய விபத்தில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும் விபத்தில் ஆசிரியர் படுகாயமடைந்தார்.
திருவோணம்:

தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள பில்லு வெட்டு விடுதி காலனி தெருவைச் சேர்ந்தவர் மதியழகன் (வயது 48). விவசாயி. இவரது மனைவி பழனியம்மாள். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் மற்றும் 6 மாதமே ஆன ஒரு ஆண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் நேற்று இரவு 7 மணிக்கு மதியழகன் வீட்டிற்கு மளிகை பொருட்கள் வாங்குவதற்காக கறம்பகுடிக்கு மோட்டார் சைக்கிளில் சென்றிருந்தார்.

பின்னர் பொருட்கள் வாங்கி கொண்டு பில்லு வெட்டு விடுதிக்கு திரும்பினார். கறம்பகுடி மூவர் ரோடு அருகே மதியழகன் வந்து கொண்டிருந்தார். அப்போது அவரது பின்னால் சின்ன அம்மன்குடி பகுதியை சேர்ந்த வின்சென்ட்(52) என்பவரும் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். இவர் பின்னையூர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கறம்பக்குடியை நோக்கி வேன் ஒன்று மரக்கட்டைகளை ஏற்றி கொண்டு மூவர் ரோடு அருகே வந்து கொண்டிருந்தது. இதில் வேன் நிலை தடுமாறி எதிரே வந்து கொண்டிருந்த மதியழகன் மற்றும் வின்சென்ட் ஆகியோர் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்தனர். இதை பார்த்த அக்கம் பக்கத்தினர் உடனே திருவோணம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து வந்த போலீசார் இருவரையும் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் திருவோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மதியழகன் பரிதாபமாக இறந்தார்.

வின்சென்ட் தஞ்சை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் மேல் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு அங்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து திருவோணம் போலீசார் வழக்கு பதிவு செய்து மோதிய வேன் டிரைவரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News