செய்திகள்
குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேர் கைது? போலீசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேரை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது. #childkidnappingpanic
சென்னை:
சென்னையில் சாலை யோரம் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த குழந்தைகள் சிலரை மர்ம கும்பல்கள் கடத்திச் சென்றன. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். ஆனால், கடத்தப்பட்ட குழந்தைகள் மீட்கப்பட வில்லை. இதுகுறித்து எக்ஸ்னோரா அமைப்பை சேர்ந்த நிர்மல் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து தலைமையிலான அமர்வு, போலீசாரின் செயலுக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர். இதுவரை தமிழகத்தில் எத்தனை குழந்தைகள் கடத்தப்பட்டன? எத்தனை குழந்தைகள் மீட்கப்பட்டன? கண்டுபிடிக்க முடியாத குழந்தைகளின் பெற்றோருக்கு சட்டப்படி இழப்பீடு வழங்கப்பட்டதா? என்று பல கேள்விகளை நீதிபதிகள் கேட்டனர்.
இதுகுறித்து தமிழக அரசு பதில் மனுவை தாக்கல் செய்துள்ளது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், சேஷசாயி ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது போலீஸ் தரப்பில் தாக்கல் செய்ய அறிக்கையை படித்து பார்த்த நீதிபதிகள், போலீசாரின் இந்த அறிக்கையும், அவர்களின் புலன் விசாரணையும் திருப்தித்தர வில்லை என்று கருத்து தெரிவித்தனர்.
பின்னர் குழந்தை கடத்தல் வழக்கில் இதுவரை எத்தனை பேரை போலீசார் கைது செய்துள்ளனர்? என்று கேள்வி கேட்டு, அதற்கு விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்டனர். #childkidnappingpanic