செய்திகள்

திமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுகிறது

Published On 2018-08-10 07:58 GMT   |   Update On 2018-08-10 07:58 GMT
கருணாநிதி மறைவைத் தொடர்ந்து திமுக செயற்குழு 14-ம் தேதி அவசரமாக கூடுவதாக பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். #DMK #DMKExecutiveCommittee
சென்னை:

கருணாநிதி மரணம் அடைந்ததால் தி.மு.க. தலைவர் பதவி காலியாக உள்ளது. தி.மு.க.வின் அடுத்த புதிய தலைவராக மு.க.ஸ்டாலின் விரைவில் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக இந்த மாத இறுதியில் அல்லது அடுத்த மாத தொடக்கத்தில் தி.மு.க. பொதுக்குழு கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.



இந்நிலையில், திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று பொதுச்செயலாளர் அன்பழகனை அவரது இல்லத்தில் சந்தித்து பேசினார். இதையடுத்து பொதுச்செயலாளர் அன்பழகன், கட்சியின் செயற்குழு கூட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.

‘திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் 14ம் தேதி காலை 10 மணியளவில் திமுக தலைமை செயற்குழு அவசர கூட்டம் சென்னை கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது தலைமை செயற்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாது கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்’ என அன்பழகன் தனது அறிக்கையில் கூறியிருக்கிறார். இக்கூட்டத்தில் கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் கட்சியின் பொதுக்குழுவை கூட்டுவது மற்றும்  கட்சியில் செய்யப்படும் மாற்றங்கள் தொடர்பாக இக்கூட்டத்தில் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று தெரிகிறது. மேலும், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட மு.க.அழகிரியை மீண்டும் சேர்ப்பது குறித்தும் பேசப்படலாம் என தெரிகிறது. #DMK #DMKExecutiveCommittee

Tags:    

Similar News