ஆரணி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் மறியல்
ஆரணி:
ஆரணி முனுகப்பட்டு அருகே உள்ள பள்ளாபட்டு கிராமத்தில் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு முனுகப்பட்டு ஊராட்சியில் இருந்து குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது.
இந்நிலையில் கடந்த 3 மாதங்களாக குடிநீர் முறையாக வழங்கப்பட வில்லை. இதனால் குடிநீருக்காக வெகுதூரம் சென்று வர நேரிட்டுள்ளது.
இது குறித்து முனுகப்பட்டு ஊராட்சியில் பலமுறை புகார் அளித்தும் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்பட 50-க்கும் மேற்பட்டோர் இன்று காலை ஆரணியில் இருந்து வாழபந்தல் செல்லும் சாலையில் காலி குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த முனுகப்பட்டு முன் னாள் ஊராட்சி மன்ற தலைவர் தேவராஜ் மற்றும் ஊராட்சி ஊழியர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மேலும் முறையாக குடிநீர் கிடைப்பதற்கான நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் அங்கு 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.