செய்திகள்

திண்டுக்கல் கலெக்டர் ஆபீசுக்கு குடிநீர் கேட்டு காலி குடங்களுடன் வந்த பெண்கள்

Published On 2018-07-30 07:42 GMT   |   Update On 2018-07-30 07:42 GMT
குடிநீர் கேட்டு பெண்கள் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

திண்டுக்கல்:

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்துக்கு பாடியூர் கிராமம் கிரியம்பட்டியைச் சேர்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் வந்தனர். காலிக்குடங்களுடன் வந்த அவர்கள் தெரிவிக்கையில், எங்கள் கிராமத்தில் 220 குடும்பங்கள் உள்ளன.

கடந்த 7 மாதமாக குடிநீர் வரவில்லை. இது குறித்து அதிகாரிகளிடம் பல முறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே இன்று கலெக்டர் அலுவலகத்தில் முறையிட வந்தோம் என்று தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து கோரிக்கை மனுவை கலெக்டர் அலுவலகத்தில் அளித்துச் சென்றனர்.

தமிழ்நாடு ஏ.ஐ.டி.யு.சி. கட்டிட தொழிலாளர்கள் சங்கம் திண்டுக்கல் மாவட்ட குழு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளிக்க வந்தனர். அவர்கள் தெரிவிக்கையில், தமிழகத்தில் 55 லட்சம் கட்டுமானத் தொழிலாளர்கள் உள்ளனர்.

பெரும்பாலானோர் தற்போது வேலையின்றி தவித்து வருகின்றனர். நல வாரியம் மூலம் அவர்களுக்கு நிவாரணம் கிடைப்பதில்லை. விபத்து நடந்தால் மருத்துவ சிகிச்சைக்கான நிதி, ஊனம் ஏற்பட்டால் நிதி உதவி போன்றவை வழங்க வேண்டும்.

கட்டிட தொழிலாளர்கள் இறந்தால் ரூ.5 லட்சம் நிதி வழங்க வேண்டும். வெளி மாநிலங்களில் வழங்கப்படுவது போல ரூ.3 ஆயிரம் பென்சன் வழங்க வேண்டும். கர்ப்பிணி தொழிலாளர்களுக்கு 6 மாதம் பேறுகால விடுப்பு சம்பளத்துடன் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட செயலாளர் பாலன், பொருளாளர் பிச்சை மணி தலைமையில் நிர்வாகிகள் சுப்பையா, பழனியப்பன், இளங்கோ, முனீஸ்வரன் உள்பட 100-க் கும் மேற்பட்ட தொழிலாளர்கள் இதில் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News