மாரியம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூரில் பிரசித்தி பெற்ற பேட்டை மாரியம்மன் மற்றும் புதுமாரியம்மன் கோவில்கள் உள்ளது. ஆடி வெள்ளியை முன்னிட்டு அம்மனுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், விபூதி, திருமஞ்சனம், சந்தனம், மற்றும் பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டு, பின்னர் பல்வேறு பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டு, ஆராதனை நடைபெற்றது.
இதில், சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
அதேபோல், நன்செய் இடையாறு மகாமாரியம்மன், பாண்டமங்கலம் மாரியம்மன், கொந்தளம் மாரியம்மன், ஆனங்கூர் மாரியம்மன், சேளுர் மாரியம்மன், கபிலர்மலை மாரியம்மன் மற்றும் பல்வேறு ஊர்களில் உள்ள மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்து அருள் பெற்றனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.