செய்திகள்

பொதுஇடங்களில் பேனர்: 6 மாதத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் - அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2018-07-20 11:36 GMT   |   Update On 2018-07-20 11:36 GMT
பொதுஇடங்களில் பேனர்கள் வைக்கும் விவகாரத்தில் 6 மாதத்திற்குள் சட்டத்திருத்தம் கொண்டு வரவேண்டும் என தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. #Highcourt

சென்னை:

ஐகோர்ட்டில், டிராபிக் ராமசாமி ஒரு பொதுநல மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் அரசியல் கட்சிகள், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக பேனர்களை வைக்கின்றனர். நடக்கக்கூட முடியாத அளவுக்கு நடைபாதைகளில் பேனர்களை வைக்கின்றனர்.

இவர்கள் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பது இல்லை. கூட்டு சேர்ந்து அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே, அனுமதிப் பெற்று பேனர் வைத்தாலும், அந்த அனுமதியை யார் வழங்கியது? எத்தனை நாட்களுக்கு அந்த பேனர் வைத்துக் கொள்ளலாம்? என்பது உள்ளிட்ட விவரங்கள் அந்த பேனரில் அச்சிட வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட வேண்டும். இதுதொடர்பாக சட்டத்திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி பி.டி. ஆஷா ஆகியோர் இன்று விசாரித்தனர். பின்னர், ‘பொதுஇடங்களில் பேனர்கள் வைப்பதற்கு முன்பு சென்னை மாவட்டத்துக்கு, மாவட்ட கலெக்டர் அனுமதி வழங்கினார். இப்போது மாநகராட்சி அனுமதி வழங்குகிறது. எனவே, அந்த பேனரில், எந்த அதிகாரி பேனர் வைப்பதற்கு அனுமதி வழங்கினார்? எத்தனை நாட்கள் பேனர் வைக்கலாம்? அந்த பேனரில் அளவு எவ்வளவு? என்பது உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அந்த பேனரின் கீழ் பகுதியில் அச்சிட்டிருக்க வேண்டும். இதற்காக, சென்னை நகர நகராட்சி மற்றும் மாநகராட்சி சட்டத்தில் திருத்தம் கொண்டு வரவேண்டும். இந்த சட்டத்திருத்தத்தை 6 மாதத்துக்குள் கொண்டு வர வேண்டும்’ என்று உத்தரவிட்டனர். #Highcourt

Tags:    

Similar News