search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பேனர்கள்"

    • பாப்பிரெட்டிப்பட்டி பகுதிகளில் போக்குவரத்து இடையூறாக வைக்கப்படும் பேனர்களை அகற்ற கோரிக்கை.
    • அனுமதியில்லாமல் பேனர்கள் வைக்கப்படுவதாக புகார்.

    தமிழகத்தில் பேனர்களால் விபத்துக்கள் அதிகரித்த நிலையில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து பொது இடங்களில் பேனர்கள் வைக்க பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டது.

    இதையடுத்து ஆர்டிஓ, பேரூராட்சி, பஞ்சாயத்து, போலீஸ் என அனுமதி பெற்று பேனர்கள் வைக்க வேண்டும் என அறிவித்துள்ளது.

    தருமபுரி மாவட்டத்தில் பேனர் வைப்பது தற்போது அதிகரித்து வருகின்றது. குறிப்பாக, பொம்மிடி, பாப்பிரெட்டிபட்டி, மற்றும் கிராமப்பகுதிகளில் அனுதியில்லாமல் பஸ் நிறுத்தம் உள்ளிட்ட பொது இடங்களில் பேனர்கள் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் வைக்கப்படுகிறது.

    சில இடங்களில் வைக்கப்படும் பேனர்களால் மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. உரிய அனுமதியில்லாமல் ஒரு சில இடங்களில் சில நாட்கள் பேனர் வைக்க அப்பகுதி போலீசாரிடம் அனுமதி பெற்று பேனர்கள் வைக்கப்பட்டு வருவதாத கூறப்படுகின்றது.

    அரசின் விதிமுறைகளை மதித்து பேனர்கள் வைக்க அதிகாரிகள் சரியான நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் காட்டி வருகின்றனர் என கூறப்படுகின்றது.

    அரசின் விதிமுறைகளை முழுமை யாக நடைமுறை படுத்தி விபத்து, மற்றும் மோதல்கள் ஏற்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.
    • நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    நெல்லை:

    பாரதிய ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் கடந்த மாதம் 28-ந்தேதி தொடங்கிய முதல் கட்ட நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது.

    இன்று மாலை நெல்லைபேட்டை பாறையடி காலனியில் இருந்து தொண்டர் சன்னதி வழியாக டவுன் ஆர்ச் வரை அண்ணாமலை நடைபயணம் செல்கிறார். இதில் சிறப்பு விருந்தினராக மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை மந்திரி பூபேந்திர யாதவ் கலந்து கொள்கிறார்.

    இதையொட்டி அண்ணாமலை மற்றும் மத்திய மந்திரியை வரவேற்று டவுன் எஸ்.என். ஹைரோடு பகுதியில் பா.ஜ.க. மாநில இளைஞரணி துணைத் தலைவர் நயினார் பாலாஜி பெயரில் வழிநெடுகிலும் பேனர், பதாகைகள் வைக்கப்பட்டது.

    இதையறிந்த போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் டவுன் பகுதிக்கு சென்று, அனுமதியின்றி பேனர்கள் வைக்கப்பட்டு இருப்பதாக கூறி அதனை அகற்ற உத்தரவிட்டனர். அதன் பேரில் அங்குள்ள ஒரு பேனரை போலீசார் அகற்றினர்.

    இதையறிந்த நயினார் பாலாஜி தலைமையில் பா.ஜ.க. தொண்டர்கள் எஸ்.என். ஹைரோட்டில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.

    சம்பவ இடத்திற்கு போலீஸ் உதவி கமிஷனர்கள் ஆவுடையப்பன், காமேஸ்வரன் ஆகியோர் சென்று பா.ஜ.க.வினருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அனுமதி இல்லாமல் பதாகைகள் வைக்கப்பட்டு உள்ளது. இதற்கு உரிய முறையில் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அதனை அகற்றுவோம் என போலீசார் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு பேனர்களுக்கு அனுமதி வாங்கும் ஏற்பாடுகளை தொடங்கினர்.

    • பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையையொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது.
    • ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என மனுவில் கூறப்பட்டுள்ளது.

    நெல்லை:

    மாவீரன் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க நிறுவன தலைவர் மாரியப்ப பாண்டியன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செய லாளர் கலைக்கண்ணன், தமிழர் உரிமை மீட்பு களம் லெனின் கென்னடி மற்றும் பல்வேறு கட்சி மற்றும் அமைப்பினர் நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமாரிடம் ஒரு மனு கொடுத்தனர். அதில் கூறியிருப்பதாவது:-

    கடந்த ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர் நினைவு தினத்தையொட்டி அஞ்சலி செலுத்தும் வகையில் பல்வேறு அமைப்புகள் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதி மறுக்கப்பட்டது.

    வருகிற 20-ந்தேதி சுதந்திர போராட்ட வீரர் ஒன்டிவீரன் வீரவணக்க நிகழ்ச்சியை முன்னெடுக்கும் வகையில் சுவரொட்டிகள் ஒட்ட அனுமதி கேட்ட போது போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். ஆனால் நாளை மறுநாள் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை வருகையை யொட்டி பல்வேறு இடங்களில் பேனர்கள், சுவரொட்டிகள் வைக்கப் பட்டுள்ளது. இதற்கு போலீசார் அனுமதி மறுக்கவில்லை. எனவே ஒன்டிவீரன் நிகழ்ச்சிகளுக்கும் பேனர், சுவரொட்டிகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது.
    • உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.

    சென்னை:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2022-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டம் 35-ன்படி திருத்தப்பட்ட 1998-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தின்படியும், அதன் கீழ் உருவாக்கப்பட்ட 2023-ம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் விதிகளின்படியும், விளம்பரப் பலகைகள், பேனர்கள் மற்றும் பதாகைகள் ஆகியவை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெறாமல் நிறுவப்படக்கூடாது. இச்சட்டம் 2023-ம் ஆண்டு ஏப்ரல் 13-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது.

    உரிமம் பெறாமல் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ள விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவை உடனடியாக பிரிவு 117-0 ன்படி அகற்றப்பட வேண்டும்.

    அதேபோல், உரிமக்காலம் முடிந்தபின்பும், சட்ட விதிமுறைகளை மீறி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பரப் பலகைகள், பேனர்கள், பாதகைகள் ஆகியவையும் உடனடியாக பிரிவு 117-P-ன்படி அகற்றப்பட வேண்டும்.

    மேற்படி பிரிவுகள் 117-O, 117-P ஆகியவற்றின்படி, விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அகற்றத் தவறினால், அவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளே அகற்றி விடும். பின்பு, அதற்கான செலவினம் பிரிவுகள் 117-O, 117-P மற்றும் விதிகள் 338, 345 ஆகியவற்றின்படி அந்தந்த நிறுவனங்களிடம் இருந்து அல்லது தனி நபர்களிடம் இருந்து வசூலிக்கப்படும்.

    மேற்கூறிய விதிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது மூன்று வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.25 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    உரிய அனுமதியின்றி பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைக்கும் நிறுவனம், தனிநபர், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளர் ஆகியோர் மீது ஒரு வருட சிறை தண்டனையோ அல்லது ரூ.5 ஆயிரம் அபராதமோ அல்லது இவை இரண்டும் சேர்த்தோ விதிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    விதிகள் 322, 341-ல் வரையறுக்கப்பட்டுள்ள இடங்களில் மற்றும் வரையறுக்கப்பட்டுள்ள அளவுகளில் மட்டுமே விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவைகளை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் உரிமம் பெற்று அமைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

    விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றின் மூலம் பொதுமக்களுக்கு எதிர்பாராத விபத்துக்கள் ஏற்பட்டு, பொதுமக்கள் காயமடைந்தாலோ அல்லது ஏதேனும் உயிரிழப்பு ஏற்பட்டாலோ அதற்குரிய இழப்பீடு வழங்குவதற்கு விளம்பரப் பலகைகள், பேனர்கள், பதாகைகள் ஆகியவற்றை அமைத்த நிறுவனமும், தனிநபரும், நிலம் மற்றும் கட்டிட உரிமையாளரும் முழு பொறுப்பாவார்கள். மேலும் உரிய குற்றவியல் வழக்கு பதியப்பட்டு தக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.
    • மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

    சென்னை:

    சென்னையில் சாலையோரங்களில், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகள் தொடர்ந்து வைக்கப்பட்டு வருகின்றன.

    இதனால் வாகன ஓட்டிகள் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் சாலையில் வைக்கப்படும் பேனர்களை உடனுக்குடன் அகற்ற சென்னை மாநகராட்சி அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது.

    ஒவ்வொரு மாதமும் 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் பேனர்களை அகற்றுவது, தூய்மை பணிகளை செய்வது மற்றும் விழிப்புணர்வு முகாம்களை நடத்துவது உள்ளிட்டவற்றை மேற்கொள்ள சென்னை மாநகராட்சி முடிவு செய்து உள்ளது.

    மண்டல அதிகாரிகள், செயற்பொறியாளர்கள், வருவாய் உதவி அதிகாரிகள், தூய்மை இந்தியா திட்டப்பணியின் செயலாக்க குழு, சுகாதார கல்வி அதிகாரி மற்றும் மக்கள் தொடர்பு அதிகாரியின் கீழ் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இது தொடர்பாக மண்டல அதிகாரிகளுக்கும் அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    மண்டலத்தில் அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள அனைத்து விளம்பர பலகைகள், பேனர்கள், பிளக்ஸ் போர்டுகளை உடனுக்குடன் அகற்ற வேண்டும். பேனர்களை தாங்கி நிற்கும் இரும்பு, மரப்பலகைகளையும் அகற்ற வேண்டும்.

    சாலையோரம் குவிக்கப்படும் பொருட்களை அப்புறப்படுத்தி பாதுகாத்து வைத்து ஏலத்தில் விட வேண்டும். சுவற்றில் ஒட்டப்படும் சுவரொட்டிகளை அகற்றி வன்ண ஓவியம் வரைந்து அழகாக்க வேண்டும். 2 மற்றும் 4-வது சனிக்கிழமைகளில் தூய்மைப்பணிகளை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பான விவரங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்ற வேண்டும்.

    மேற்கண்ட அறிவுரைகள் மண்டல அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளன.

    • திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
    • விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் அனுமதியின்றி அரசியல் கட்சிகளோ, தனியார் நிறுவனங்களை சேர்ந்தவர்களோ டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கக்கூடாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. அதையும் மீறி திருவள்ளூர் பகுதியில் தொடர்ந்து பேனர்கள் வைக்கப்பட்டு வருகிறது. இதனை அதிகாரிகள் அவ்வப்போது அகற்றி நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் அனுமதி இன்றி எராளமான டிஜிட்டல் பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு தொடரந்து புகார்கள் வந்தன. இதைத்தொடர்ந்து அதனை அகற்ற நகராட்சி ஆணையாளர் ராஜலட்சுமி அதிரடியாக உத்தரவிட்டார்.

    நகராட்சி சுகாதார அலுவலர் கோவிந்த ராஜ் தலைமையில் நகராட்சி ஊழியர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதிகளில் விதி முறை மீறி வைக்கப்பட்ட பேனர்கள் மற்றும் அறிவிப்பு பலகைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய இந்த பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதுவரை நகராட்சிக்கு உட்பட்ட 27 வார்டுகளில் அனுமதியின்றி வைக்கப்பட்டிருந்த அரசியல் கட்சிகளின் டிஜிட்டல் பேனர்கள், தனியார் நிறுவனங்களின் அறிவிப்பு பலகைகள், பேனர்கள் என மொத்தம் 374 டிஜிட்டல் பேனர்கள் அகற்றப்பட்டு உள்ளன. விதிமுறை மீறி பேனர்கள், விளம்பர பலகைகள் வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    ×