செய்திகள்

லாரி மீது கார் மோதி விபத்து: தந்தை - மகள் பலி

Published On 2018-07-19 17:09 GMT   |   Update On 2018-07-19 17:09 GMT
பர்கூர் அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் தந்தை-மகள் பரிதாபமாக இறந்தனர். குழந்தைகள் உள்பட 3 பேர் படுகாயம் அடைந்தனர்.
பர்கூர்:

தர்மபுரி குமாரசாமிபேட்டையை சேர்ந்தவர் நடராஜன் (வயது 50). இவருடைய மகள் ரஞ்சிதா (26). இவருக்கு திருமணமாகி கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவரை பிரிந்து வாழ்ந்து வந்ததாக கூறப்படுகிறது. ரஞ்சிதாவுக்கு பவ்யஸ்ரீ (7), காவ்யஸ்ரீ(3) என்ற 2 குழந்தைகள் உள்ளனர். நடராஜனின் குடும்ப நண்பர் சென்னை மேற்கு மாம்பலத்தை சேர்ந்த சுந்தரபாண்டியன்.

இவர்கள் அனைவரும் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள உறவினரை பார்த்து விட்டு, அங்கிருந்து காரில் சென்னை நோக்கி சென்று கொண்டிருந்தனர். காரை சுந்தரபாண்டியன் ஓட்டினார். பர்கூர் அருகே உள்ள ஒப்பதவாடி என்ற இடத்தில் சென்றபோது முன்னால் சென்ற லாரி மீது எதிர்பாராதவிதமாக கார் மோதியது.

இதில் காரின் முன்பகுதி அப்பளம் போல நொறுங்கியது. காரின் இடிபாடுகளுக்குள் சிக்கி படுகாயம் அடைந்த நடராஜன், ரஞ்சிதா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். பவ்யஸ்ரீ, காவ்யஸ்ரீ, சுந்தரபாண்டியன் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு தங்கவேல், இன்ஸ்பெக்டர் பழனிசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் அவர்கள் விபத்தில் இறந்த நடராஜன், ரஞ்சிதா ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

விபத்து தொடர்பாக பர்கூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் தந்தை-மகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 
Tags:    

Similar News