செய்திகள்

திருக்கோவிலூர் அருகே கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளி சிக்கினான்

Published On 2018-07-19 13:09 GMT   |   Update On 2018-07-19 13:09 GMT
5 மாத கர்ப்பிணி பெண்ணை கொன்ற கொலையாளியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர்:

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ளது அருதங்குடி கிராமம். இந்த பகுதியை சேர்ந்தவர் ராமதாஸ். இவரது மனைவி புஷ்பா (வயது 28). இவர் 5 மாத கர்ப்பிணியாக இருந்து வந்தார்.

கடந்த 15-ந் தேதி காலையில் புஷ்பா வீட்டின் அருகில் கரும்பு தோட்டத்தில் உள்ள பம்புசெட்டு கிணற்றுக்கு குளிக்க சென்றபோது மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டார். அவரது கழுத்தில் கிடந்த நகைகளும் கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இந்த கொலை குறித்து தகவல் அறிந்த திருப்பாலபந்தல் போலீசார் விரைந்து சென்று புஷ்பாவின் உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். மேலும் இந்த கொலை தொடர்பாக துப்பு துலக்க கொண்டுவரப்பட்ட போலீஸ் மோப்ப நாய் கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து மோப்பம் பிடித்து விட்டு நேராக புஷ்பாவின் வீட்டிற்கே சென்றது.

இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் புஷ்பாவின் கணவர் ராமதாஸ், மாமனார் தேவநாதன், உறவினர் சந்தோஷ் ஆகிய 3 பேரை திருப்பால பந்தல் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில் பல தகவல்கள் கிடைத்தன. ராமதாஸ் மும்பையில் கூலிவேலை பார்த்து வந்தார். அவர் ஊருக்கு வரும்போதெல்லாம் புஷ்பாவுக்கும், ராமதாசுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

இதையொட்டி கடந்த 4 நாட்களாக ராமதாஸ் உள்பட 3 பேரிடம் போலீசார் துருவிதுருவி விசாரணை நடத்தினர். இதில் கொலையாளி யார் என்பது போலீசாருக்கு அடையாளம் தெரிந்தது. அவரிடம் தனிப்படை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று கொலையாளி கைது செய்யப்படுவான் என்று போலீசார் தெரிவித்தனர்.

Tags:    

Similar News