செய்திகள்

சென்னை எழும்பூரில் ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூ. கட்சியினர் 200 பேர் கைது

Published On 2018-07-02 08:09 GMT   |   Update On 2018-07-02 08:09 GMT
எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி ரெயில் மறியலில் ஈடுபட்ட கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 200 பேர் கைது செய்யப்பட்டனர்.
சென்னை:

எஸ்.சி.எஸ்.டி. பிரிவினர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டத்தை நீர்த்துப் போக செய்யும் வகையில் உள்ள சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்ய வேண்டும். அட்டவணை 9-ல் சேர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் இன்று மாநிலம் முழுவதும் ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என்று அறிவித்து இருந்தனர்.

அதன்படி சென்னை எழும்பூர் ரெயில் நிலையத்துக்கு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு செயலாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் தொண்டர்கள் மறியல் போராட்டத்துக்கு திரண்டு வந்தனர்.

ரெயில் நிலையத்தில் புறப்பட தயாராக இருந்த நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரெயில் முன்பு மறியலில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் இறங்கி இன்று கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷம் எழுப்பினார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட பாலகிருஷ்ணன் உள்பட சுமார் 200 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை அங்கிருந்து மண்டபத்துக்கு அழைத்து சென்றனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினர் பீம்ராவ் தலைமையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி காஞ்சி வடக்கு மாவட்ட செயலாளர் தேவஅருள் பிரகாசம், தாம்பரம் நகர ஒருங்கிணைப்பாளர் சாமுவேல் உட்பட 500-க்கும் மேற்பட்டவர்கள் தாம்பரம் சண்முகம் சாலையில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு வந்தனர்.

அவர்கள் தாம்பரத்தில் இருந்து சென்னை கடற்கரை நோக்கி சென்ற மின்சார ரயிலை மறித்து மத்திய அரசுக்கு எதிராக கோ‌ஷங்கள் எழுப்பினர்.

திருத்தணியில் இன்று இந்திய கம்யூனிஸ்டு கட்சி, விடுதலை சிறுத்தைகள், தலித் மக்கள் முன்னணி சார்பில் போராட்டம் நடைபெற்றது. திருத்தணி ரெயில் நிலையம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி 50 பெண்கள் உள்பட 100 பேரை கைது செய்தனர்.
Tags:    

Similar News