செய்திகள்

குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை

Published On 2018-06-21 15:23 GMT   |   Update On 2018-06-21 15:23 GMT
குழந்தை இல்லாத ஏக்கத்தில் தீக்குளித்து பெண் தற்கொலை செய்து கொண்டார். காப்பாற்ற முயன்ற கணவர் படுகாயம் அடைந்தார்.
ஜெயங்கொண்டம்:

அரியலூர் மாவட்டம், ஜெயங்கொண்டம் அருகே உள்ள செங்குந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் ராமலிங்கம். கைத்தறி தொழிலாளி. இவரது மகள் கவிதா(வயது 29). இவருக்கும், குஞ்சுவெளி கிராமத்தை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சீமானுக்கும்(34) கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்த தம்பதியினருக்கு குழந்தை இல்லை.

இதனால், சீமான் தினமும் மது குடித்து விட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்தார். குழந்தை இல்லாத ஏக்கம் ஒரு புறம், கணவருடன் பிரச்சினை என கவிதா தவித்து வந்தார். இதனால், மனவேதனை அடைந்த அவர், ஆறுதலுக்காக பெற்றோர் வீட்டுக்கு சென்றார். இந்நிலையில், ராமலிங்கம் தனது வீட்டிற்கு அருகே வாடகை வீட்டில் மகள் கவிதா, மருமகன் சீமானை குடி வைத்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சீமான் வழக்கம்போல மது குடித்துவிட்டு வந்து, கவிதாவிடம் தகராறு செய்தார். இதனால், மனமுடைந்த கவிதா வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை எடுத்து உடலில் ஊற்றி தீ வைத்து கொண்டார். தீ உடல் முழுவதும் பரவியதால் வலியால் அலறி துடித்தார். அவரது அலறல் சத்தத்தை கேட்டு அதிர்ச்சியடைந்து ஓடி வந்து சீமான், கவிதாவை காப்பாற்ற முயன்றார். அப்போது அவருக்கும் பலத்த தீக்காயம் ஏற்பட்டது.

அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து கணவன்-மனைவி இருவர் மீதும் பற்றி எரிந்த தீயை அணைத்து சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கவிதா மேல்சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி கவிதா நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.

சீமான் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் படுகாயத்துடன் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, ஜெயங்கொண்டம் போலீஸ் நிலையத்தில் ராமலிங்கம் கொடுத்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News