போடியில் நகையை கொடுக்க மறுத்த ஆசிரியையை கத்தியால் குத்திய கொள்ளையன்
மேலசொக்கநாதபுரம்:
தேனி மாவட்டம் போடியைச் சேர்ந்தவர் மாலதி. திருமலாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவர் சம்பவத்தன்று இரவு வேலைகளை முடித்து விட்டு வீட்டில் தூங்கினார்.
நள்ளிரவு சமயம் மர்ம நபர் ஒருவர் நைசாக கதவைத் திறந்து உள்ளே புகுந்தார். அப்போது ஆசிரியை மாலதியின் கழுத்தில் கிடந்த நகையை பறிக்க முயற்சித்தார். ஆனால் அவர் நகையை கொடுக்க மறுத்ததால் ஆத்திரமடைந்த கொள்ளையன் மாலதியை கத்தியால் குத்தி விட்டு ஓடி விட்டார்.
படுகாயமடைந்த ஆசிரியை மாலதி போடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து போடி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் போடி செல்வ விநாயகர் கோவில் தெருவைச் சேர்ந்த இளங்கோவன் மகன் மணி (வயது 21) என்பவர்தான் ஆசிரியை மாலதியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.