ஆலிவலம் அருகே குடும்ப தகராறில் இளம்பெண் தற்கொலை
திருவாரூர்:
திருவாரூர் மாவட்டம், ஆலிவலம் அருகே உள்ள ராயநல்லூரைச் சேர்ந்தவர் சத்தியராஜ். இவரது மனைவி பிரியா (வயது 24). இவர்கள் இருவரும் கடந்த 2012-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தற்போது 4 வயதில் ஒரு பெண் குழந்தையும், ஒரு வயதில் ஆண் குழந்தையும் உள்ளனர்.
சத்திய ராஜீக்கும், பிரியாவுக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று வழக்கம் போல் 2 பேருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த பிரியா சத்தியராஜ் வெளியே சென்றிருந்த நேரத்தில் தனது சேலையால் வீட்டின் சமையலறையில் உள்ள விட்டத்தில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் ஆலிவலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற முத்துப்பேட்டை டி.எஸ்.பி இனிக்கோ திவ்யன் மற்றும் ஆலிவலம் போலீசார் பிரியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.