செய்திகள்

மானூர் அருகே பஸ் - டிராக்டர் மோதி விபத்து: ஒருவர் பலி

Published On 2018-06-13 18:13 GMT   |   Update On 2018-06-13 18:13 GMT
மானூர் அருகே பஸ் - டிராக்டர் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் பலியானார்.
மானூர்:

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் தாராபுரத்தைச் சேர்ந்தவர் பெருமாள் மகன் மணி (வயது 40). இவர் அப்பகுதியில் வல்கனைசிங் கடை நடத்தி வந்தார். இவர் தற்போது புதிதாக வீடு கட்டி வந்தார். நேற்று முன்தினம் மாலையில் மணி தனது வீட்டின் கட்டுமான பணிக்காக, மானூர் ரஸ்தா பகுதியில் உள்ள தனியார் குவாரியில் இருந்து எம்.சாண்ட் மணலை வாங்கி, அதை டிராக்டரில் கொண்டு வர நினைத்தார்.

அந்த டிராக்டரை அவருடைய நண்பரான நெல்லை கண்டியப்பேரியைச் சேர்ந்த தண்டாயுதபாணி (49) ஓட்டி வந்தார். அந்த டிராக்டரில் மணியும் வந்தார். நெல்லை-சங்கரன்கோவில் ரோட்டில் நரியூத்து விலக்கு அருகில் சென்றபோது, பின்னால் நெல்லை நோக்கி வந்த தனியார் பஸ் எதிர்பாராதவிதமாக டிராக்டரின் பின்புறம் மோதியது.

இந்த விபத்தில் டிராக்டர் கவிழ்ந்தது. தண்டாயுதபாணி, மணி ஆகிய 2 பேரும் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினர். உடனே அவர்களை சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி இரவில் மணி பரிதாபமாக உயிரிழந்தார். தண்டாயுதபாணிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இதுகுறித்த புகாரின்பேரில், மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, பஸ் டிரைவரான அதிசயபுரம் காமராஜ் நகரைச் சேர்ந்த அம்புரோசை (57) கைது செய்தார். விபத்தில் இறந்த மணிக்கு அனிதா என்ற மனைவியும், சந்தியா என்ற மகளும், சந்துரு என்ற மகனும் உள்ளனர். 
Tags:    

Similar News