செய்திகள்
ஜேடர்பாளையம் அருகே வாலிபரை தாக்கிய 2 பேர் கைது
ஜேடர்பாளையம் அருகே முன்விரோத தகராறில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே மணல்மேடு பகுதியை சேர்ந்தவர் மோகன் (வயது 35). இவரது மனைவி நித்யா (30). இவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் மோகனூக்கும், அதே பகுதியை சேர்ந்த சக்திவேல்(39) என்பவருக்கும் முன்விரோதம் இருந்ததாக தெரிகிறது.
அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. நேற்று மாலை மீண்டும் 2 பேருக்கும் இடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது ஆத்திரம் அடைந்த சக்திவேல் மற்றும் அவரது நண்பர் ரவி (40) ஆகியோர் சேர்ந்து மோகனை தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு பரமத்திவேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து மோகன் ஜேடர்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்து நாமக்கல் கிளை ஜெயிலில் அடைத்தார்.