செய்திகள்

குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய கொள்ளையன் அடித்துக்கொலை

Published On 2018-05-19 08:21 GMT   |   Update On 2018-05-19 08:21 GMT
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே லாரியை கடத்திய சென்ற கொள்ளையனை பொதுமக்கள் மற்றும் சக டிரைவர்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
குமாரபாளையம்:

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் அருகே படவீட்டில் சிமெண்ட் ஆலை உள்ளது. இதன்அருகே ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

நேற்று இரவு இந்த லாரியை யாரோ திருடிச் சென்றுவிட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த லாரி உரிமையாளர் ஜி.பி.ஆர்.எஸ். கருவி மூலம் லாரி எங்கே சென்று கொண்டிருக்கிறது என்பதை கண்காணித்தார்.

அப்போது ஈரோடு மாவட்டம் பவானி அருகே அந்த லாரி சென்று கொண்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து அவர் மற்றும் சகடிரைவர்கள் அங்கு விரைந்து சென்று லாரியை மடக்கிப்பிடித்தனர். பின்னர் அவர்கள் லாரியை மீட்டு கொள்ளையனையும் குமாரபாளையத்திற்கு அழைத்து வந்தனர்.

பின்னர் போலீசில் அவரை ஒப்படைப்பதற்காக அங்குள்ள ஒரு மரத்தில் கட்டி வைத்தனர். இதைப்பற்றி கேள்விப்பட்ட டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் அங்கு வந்து கொள்ளையனுக்கு தர்ம அடி கொடுத்தனர்.இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அவர் யார்? எந்த பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை

இதுகுறித்து தகவல் அறிந்ததும் குமாரபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர். பின்னர் கொலையுண்ட கொள்ளையன் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இச்சம்பவம் குமாரபாளையம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
Tags:    

Similar News