செய்திகள்

ஸ்டாலினை மீறி அரசியல் செய்ய முடியாது - ரஜினி, கமல் மீது சத்ருகன் சின்கா தாக்கு

Published On 2018-05-18 04:32 GMT   |   Update On 2018-05-18 04:32 GMT
தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி ரஜினி, கமலால் அரசியல் செய்ய முடியாது என்று சத்ருகன் சின்ஹா கூறி உள்ளார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth
சென்னை:

இந்தி மூத்த நடிகர் சத்ருகன் சின்ஹா. இவர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவருக்கும் நண்பர். சினிமாவுக்கு பின்னர் அரசியலுக்குள் நுழைந்த சத்ருகன் சின்ஹா பா.ஜ.க. தலைமை மீது மோதல் போக்கை கடைபிடித்து வருகிறார்.

தற்போது பீகார் மாநில பா.ஜ.க.வின் அதிருப்தி எம்.பி.யாக உள்ளார். மத்திய மந்திரியாகவும் இருந்தவர். ரஜினி, கமல்ஹாசன் இருவரும் அரசியலுக்குள் நுழைவதை கடுமையாக தாக்கி உள்ளார். அவர் கூறியதாவது:-



‘ரஜினி, கமல், இருவரும் என் நண்பர்கள். அவர்கள், தெளிவான திரைக்கதையோடு தான், அரசியல் களத்தில் குதித்திருப்பார்கள் என, நம்புகிறேன். அவர்கள் அரசியலில் இறங்குவதற்கு முன் என்னிடம் அறிவுரை கேட்கவில்லை. கேட்டிருந்தால், அரசியலுக்கு வராதீர்கள் என கூறியிருப்பேன். அதில் இருக்கும் கண்ணிவெடிகள் குறித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி இருப்பேன்.

காரணம், அவர்கள் நினைப்பதை போல அரசியல் என்பது ரோஜாக்கள் நிறைந்த படுக்கை அல்ல. தமிழகத்தில் ஸ்டாலினுக்கு மக்கள் செல்வாக்கு உள்ளது. அதை மீறி இவர்களால் அரசியல் செய்ய முடியாது’ .

இவ்வாறு அவர் கூறினார்.

சத்ருகன் சின்ஹா ரஜினிக்கு நெருக்கமான நண்பர். சத்ருகன் சின்ஹா மகள் சோனாக்‌ஷி சின்ஹா ரஜினிக்கு ஜோடியாக ‘லிங்கா’ படத்தில் நடித்தவர். இதே சத்ருகன் சின்ஹா தான் கடந்த 2017 மே மாதம் ரஜினியை அரசியலுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். ஆனால் பா.ஜ.கவை ஆதரிக்க கூடாது. தனிக்கட்சி தான் தொடங்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். #ShatrughanSinha #KamalHaasan #Rajinikanth

Tags:    

Similar News